Skip to main content
Date

ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் சொத்து விவரங்களை சேகரித்து, பொதுவெளியில் அறிக்கைகளாகவும், செய்தியாகவும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது இந்தியாவில் உள்ள ஏழு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 2015 -16 முதல் 2016 -17 வரையிலான காலகட்டத்தில் வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, இந்த கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.1,559.17 கோடி மற்றும் செலவு ரூ.1,228.26 கோடி எனவும் அந்தத் தகவல் கூறுகிறது. அதேபோல், மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் பாஜகவின் வருமானம் 81% அதிகரித்துள்ளது. அதாவது ரூ.570.86 கோடியில் இருந்து, ரூ.1,034.27 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், காங்கிரஸின் வருமானமானது ரூ.261.56 கோடியில் இருந்து, ரூ.225.36 கோடியாக 14% குறைந்துள்ளது. 

 

இதுதொடர்பான விவரங்களை வெளியிடுவதில் சில அரசியல் கட்சிகள் எப்போதும் தாமதிப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. ஜனநாயகத்தையும், தேர்தலையும் வலுப்படுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிதி விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.