தி.மு.க. 26.5 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க 11 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் 45 விழுக்காடு மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக ஏடிஆர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின்போது, ஐந்து தேசிய மற்றும் 27 மாநில அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.7445.566 கோடி நிதியை நன்கொடையாக வசூலித்துள்ளன. ஆனால் பெறப்பட்ட நிதியில் 45 விழுக்காடு மட்டுமே கட்சிகள் செலவிட்டுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கை (ஏ.டி.ஆர்) தெரிவித்துள்ளது.
இதில் தேசிய கட்சிகள் ரூ.6930.246 கோடி (93.08%) நிதியையும், மாநில கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) நிதியையும் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த காலகட்டத்தில் தேசிய கட்சியான பா.ஜ.க 6,268 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. முறையே காங்கிரஸ் ரூ.592 கோடி உடன் இரண்டாவது இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 62 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டை பொருத்தவரை, 2024 மக்களவைத் தேர்தலின்போது, ஆளும் தி.மு.க. ரூ.26.5 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க 11 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.
கட்சிகள் சமர்ப்பித்த செலவு அறிக்கையில், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வேலைகளுக்காக பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விளம்பரம்
- பயணச் செலவுகள்
- பிற செலவுகள்
- வேட்பாளர்களுக்கான செலவு
- வேட்பாளர் குற்றப் பின்னணியை வெளியிடுவதற்கு ஏற்படும் செலவு.
- சமூக ஊடக தளங்கள்/செயல்பாடுகள்/பிற வழிகளில் மெய்நிகர் பரப்புரைக்கான செலவுகள்
தேர்தல் அறிவிப்பு முதல் தேர்தல் நிறைவடைவதற்கு இடையில் செலவிடப்பட்ட நிதி குறித்த தகவல்களை வழங்கும் இந்த அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இவற்றின் காலம் 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்று ஏ.டி.ஆர். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
