Skip to main content
Date

ஆளும் பாரதீய ஜனதா கட்சி கடந்த நிதி ஆண்டில் 437 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தேசிய கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

நேற்று(புதன்கிழமை) தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 'பிரவுண்ட் எலக்ட்ரானிக் ட்ரஸ்ட்' என்ற அமைப்பு மூலம் அதிக நன்கொடைகளை பெற்றுள்ளன. இந்த அமைப்புக்கு பெரிய நிறுவனங்களின் ஆதரவு உள்ளது. இதில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் அடங்கும். 

தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான தகவலை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு (ADR) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "புரோடென்ட் எலக்ட்ரானிக் டிரஸ்ட்" மட்டும் பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு ரூ. 164.30 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. அதில் பா.ஜ.க. 154.30 கோடி ரூபாய்களை பெற்றுள்ளது. இது மொத்த நனன்கொடை நிதியில் 35 சதவீதமாகும். காங்கிரசுக்கு 10 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. 

2017-18 ஆம் ஆண்டு தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை நிதி ரூ.469,89 கோடி ஆகும். அதில் பாஜவுக்கு மட்டும் 437.04 கோடி ரூபாய் கோடி தரப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 26.65 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த நன்கொடையில் 90 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்களும், 10 சதவீதம் தனிநபர்களும் கொடுத்துள்ளனர். 2017-18 ஆண்டுகளில் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாஜவுக்கு 400.23 கோடி ரூபாயை அளித்துள்ளனர். அதேநேரத்தில் காங்கிரசுக்கு 19.29 கோடி ரூபாய் மட்டுமே அளித்துள்ளார்கள்.

ஏடிஆர் அறிக்கையில் படி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை நிதியை விட 12 மடங்கு அதிகமான நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் அதிகபட்சமாக தலைநகரம் டெல்லியில் இருந்து கிடைத்துள்ளது.

இவ்வாறு ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு (ADR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.